நேதாஜி ராணுவ படையில் பணியாற்றிய ஐஎன்ஏ வீரங்கனை அஞ்சலை பொன்னுசாமி உயிரிழந்தார் - தலைவர்கள் இரங்கல்
1920ம் ஆண்டு கோலாலம்பூரில் உள்ள செந்தூல் நகரில் பிறந்தவர்தான் அஞ்சலை. இவருக்கு 21 வயது இருக்கும்போது, மலேசியாவில் ஜப்பானியப் படைகள் ஊடுருவியது.
அப்போது நடைபெற்ற 2ம் உலகப் போரின் போது, இந்தியப் பெண்கள் ராணுவ உடையில் கம்பீரமாக இருப்பதை பார்த்த வியந்து போன அஞ்சலைக்கு ராணுவத்தில் சேர ஆசை ஏற்பட்டது.
இதனையடுத்து, அஞ்சலை இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்ஸி ராணி பிரிவில் சேர்ந்தார். இந்தியாவை பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுக்க 1943-ல் சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய படை இது. அப்பெண்களை பார்த்து, உத்வேகமடைந்த அஞ்சலை, நாட்டின் சுதந்திரத்துக்காக, தன்னையும் அப்படையில் அர்ப்பணித்தார்.
2ம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியடைந்தது. இதனையடுத்து, இந்திய தேசிய ராணுவம் கலைக்கப்பட்டது. இதனால் அஞ்சலையும் மலேசியாவிற்கு திரும்பிச் சென்றார்.
பிறகு 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததை அறிந்து பெரிதும் மகிழ்ந்தார். இந்நிலையில், 102 வயதான அஞ்சலை பொன்னுசாமி, வயது மூப்பு காரணமாக நேற்று மலேசியாவில் காலமானார்.
இவரின் மறைவு செய்தியை அறிந்த இந்திய பிரதமர் உட்பட பல அரசியல் தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.