பஞ்சாப் அணியை மிரட்டி எடுத்த ரஸல் - சிக்சர் மழையில் நனைந்த ரசிகர்கள்!
பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
15-வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 8-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதையடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் 1 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின் ஜோடி சேர்ந்த தவான் - ராஜபக்சா அதிரடியாக விளையாடி ரன் குவித்தது.
இதையடுத்து ராஜபக்சா 31 ரன்களில் சௌதீயின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் களமிறங்கிய ரபாடா அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 25 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழுந்து ஆல் அவுட்டானது.
இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கியது கொல்கத்தா அணி. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரகானே,ஷ்ரேயஸ் ஐயர் அடுத்தடுத்து அவுட்டான நிலையில் கொல்கத்தா அணி 9 ஓவர் முடிவில் 56 ரன்கள் எடுத்திருந்தது.
12-வது ஓவர் வீசிய ஓடின் ஸ்மித் 30 ரன்களை வாரி வழங்கினார்.அந்த ஓவரில் அதிரடி காட்டிய கொல்கத்தா வீரர்கள் ரஸல் - பில்லிங்ஸ் சிக்சர் மழை பொழிந்தனர்.
ரஸல் 31 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் கொல்கத்தா அணி 14.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.