வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே உயிரைவிட்ட ஆசிரியர் - 31 வயதில் பரிதாபம்
ஆசிரியர் வகுப்பில் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பு
ஆந்திர மாநிலம், வாகவரிபாளையம் பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் வீரபாபு (31). இவர் வழக்கம்போல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவர் நிலைக்குலைந்து கீழே விழுந்தார். இதனால் பதறிய மாணவர்கள், மற்ற ஆசிரியர்களை அங்கு அழைத்து வந்துள்ளனர். இதையடுத்து, மற்ற ஆசிரியர்கள் உடனே அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆசிரியர் பலி
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரே வாரத்தில் மட்டும் தெலங்கானாவில் 35 வயதுக்கு உட்பட்ட 11 பேர் இதுபோன்ற திடீர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.