ஒரு தலைவன் உருவாக ஒரு யுகமே தேவை : ஆந்திர அரசியலின் ராக்கி பாய் உருவான கதை
ஒரு தலைவன் உருவாக ஒரு யுகமே தேவை என்பதுதான் நமது இந்திய அரசியலின் நிதர்சனமான உண்மை . அவ்வாறு இந்திய அரசியலில் தங்கள் தடத்தை பதிக்க நினைத்து காணாமல் போனவர்கள் ஏராளம் தனக்கென தனி இடத்தையும் ஆந்திர அரசியல் வரலாற்றை மாற்றி முதலமைச்சராக மாறிய ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை பயணம் கேஜிஎப் படத்தில் வரும் ராக்கி பாய் கதை போல பல சுவாரஸ்யங்கள் நிறைந்தது.
ஆந்திர மக்களின் மனம் கவர்ந்த நாயகனாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் ராஜசேகர ரெட்டி. நான்கு முறை எம்.பி, 4 எம்.எல்.ஏ எனத் தொடர் வெற்றிகளைக் குவித்தவர்.
தலைவன் உருவான தருணம்
2009-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி நல்லமலா காட்டுப் பகுதி வழியாக ஹெலிகாப்டரில் பயணித்தார். அந்த வாகனம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. தீவிர தேடுதலுக்குப் பிறகு ருத்திரகொண்டா மலை உச்சியில் அந்த ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த ராஜசேகர ரெட்டி உட்பட 5 பேரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் திடீர் மரணத்தை ஆந்திர மக்கள் எதிர்பார்க்கவில்லை.
காங்கிரஸ் விலகல்
ராஜ சேகரரெட்டி மரணத்துக்குப் பிறகு ஜெகன்மோகன் ரெட்டிக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வந்தது. இதனால் காங்கிரஸை விட்டு வெளியேறிய ஜெகன்மோகன் ரெட்டி 2010-ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் (யுவஜன, ஸ்ரமிஜ, ருது காங்கிரஸ் கட்சி) என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.
ஒய்.எஸ்.ஆர் பெயரில் கட்சி தொடங்கினாலும் மக்களின் செல்வாக்கைப் பெறுவது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. இருப்பினும், 2011-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் கடப்பா மக்களவைத் தொகுதியில் 5,45,671 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ், தெலுங்கு தேச வேட்பாளரைத் தோற்கடித்தார் ஜெகன்
ஊழல் வழக்கு
எம்.பியாக வெற்றி பெற்ற பிறகு அடுத்தடுத்த வழக்குகளில் சிக்கினார். ஊழல் புகாரில் சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறையில் இருந்தார். இதனால் இவருக்கும் மக்களுக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் 2013-ம் ஆண்டு ஜெகன் மீதான வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதன்பிறகு மக்களோடு மக்களாக தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் வேலைகளைத் தொடங்கினார்.
2014-ம் ஆண்டு ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் ஒய்.ஆர்.எஸ் காங்கிரஸ் கட்சி 66 இடங்களைக் கைப்பற்றியது. அதேநேரம், நடிகர் பவன் கல்யாண் `ஜன சேனாஎன்ற தனிக் கட்சியைத் தொடங்கினார். அதிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் ஜனசேனா ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவியது 2017-ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு எதிராக `ப்ரஜா சங்கல்ப யாத்ரா’ என்ற பெயரில் 13 மாதங்கள் 3,000 கி.மீ வரை நடைபயணம் மேற்கொண்டார்.
அதுதான் ஆந்திராவில் ஜெகனின் காலடி சற்று அழுத்தமாகப் பதியத் தொடங்கிய தருணம். அதேநேரத்தில் பா.ஜ.கவுக்கும் தெலுங்கு தேசத்துக்கும் இடையேயான கூட்டணி முறிந்தது ஜெகனுக்குச் சாதகமாக அமைந்தது. இதையடுத்து காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தார் சந்திரபாபு நாயுடு. இவை அனைத்தும் ஒரு வருடத்துக்குள் நடந்ததால் சந்திரபாபு நாயுடுவின் கோட்டையில் விரிசல் விழத் தொடங்கியது.
கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம், விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சிதான் காரணம் எனப் பேச்சுகள் கிளம்பியதால், ஜெகன் மோகன் ரெட்டி பக்கம் சாயத் தொடங்கினர் ஆந்திர மக்கள்.
ஆந்திராவில் கடந்த மக்களவைத் தேர்தலோடு சேர்த்து நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி அமோக வெற்றி பெற்றது. சட்டப்பேரவைத் தேர்தலில் 175 தொகுதிகளில் 151-ல் வென்று பெரும் வலிமையுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளார் ஜெகன். மக்களவைத் தேர்தலிலும் 25 தொகுதிகளில் 22-ல் அவரது கட்சி வென்றது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிந்துபோனபிறகு இரண்டாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக பதவியேற்றார். முதலமைச்சராக பதவியேற்றவுடன் இரண்டாயிரமாக இருந்த முதியோர் உதவி தொகையினை மூவாயிரமாக உயர்த்தி வழங்க கோப்புகளில் கையெழுத்திட்டார். முதலமைச்சராக பதவியேற்ற ஒரு வாரம் கழித்து ஜூன் எட்டாம் தேதி 25 பேர் அவரது அமைச்சரவையில் இணைந்தனர் இதில் 14 பேர் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, மலைவாழ் மற்றும் இதர சிறுபான்மையினர். ஆந்திர அரசில் ஐந்து பேர் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றனர்.
சந்திரபாபு நாயுடு சரிவுக்கு காரணம்
ஆந்திர அரசின் முகமாக இருந்த சந்திரபாபு நாயுடுவை மறந்து ஜெகனுக்கு ஆதரவு எப்படி பெருகியது கடந்த தேர்தலில் நரேந்திர மோதி, சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கலயான் ஒன்றாக பிரசாரம் செய்தது, விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு, புதிதாக பிரிக்கப்பட்ட மாநிலத்திற்கு மூத்த தலைவரை தேர்ந்தெடுப்பது சரியாக இருக்கும் என்ற தோற்றம், இவையெல்லாம் சந்திரபாபு நாயுடுவுக்கு சாதகமாக அமைந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி தெலுங்கு தேசம் கட்சியின் பரம எதிரியான காங்கிரசுடன் கைக்கோர்த்தார் சந்திரபாபு நாயுடு. இது எந்த வகையிலும் அவருக்கு உதவவில்லை. நரேந்திர மோதி உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் என்று புகழ்ந்த சந்திரபாபு நாயுடு, திடீரென அவருக்கு எதிராக வசை பாடியதை மக்கள் நம்பவில்லை. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மோதி மீது குற்றஞ்சாட்டினார் சந்திரபாபு நாயுடு.
சிறப்பு அந்தஸ்து விஷயத்தில் மோதி மீது மக்கள் வருத்தத்தில் இருந்தாலும், இதில் அவர்கள் சந்திரபாபு நாயுடுவின் வார்த்தைகளை நம்பவில்லை. மேலும் பல விவகாரங்களில் மக்களின் நம்பிக்கையை பெற சந்திராபாபு நாயுடு தவறிவிட்டார். வாஷிங்டனை போன்ற ஒரு தலைநகரத்தை உருவாக்க வேண்டும் என்பது ஜெகனின் கனவு என்று அவருக்கு நம்பிக்கைக்குரிய நபர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், நம்பிக்கை என்பது வேறு நிஜம் என்பது வேறு.
ஜெகன் மோகன் ரெட்டி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அதையெல்லாம் மீறி அவர் ஒரு செயல்திறன் வாய்ந்தவர் என்றும் கடின உழைப்பாளி என்றும் பெயர் வாங்கி இன்று ஆந்திர மக்களின் மனதில் தலைவனாக இருந்து வருகின்றார் ஜெகன் மோகன் ரெட்டி.