விவசாயியை கோடீஸ்வரனாக மாற்றிய தக்காளி - 45 நாட்களில் ரூ.4 கோடி வருமானம் ஈட்டி அசத்தல்!
தக்காளி பயிரிட்டதன் மூலம் விவசாயி ஒருவர் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
தக்காளி விலை உயர்வு
தக்காளியின் விலை நாளுக்கு நாள் விண்ணை முட்டும் அளவிற்கு ஏறிக்கொண்டே செல்கிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால் தக்காளியை பயிரிட்டவர்களுக்கு இந்த காலம் பொற்காலமாக அமைந்துள்ளது.
கோடீஸ்வரரான விவசாயி
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கரகமண்டா பகுதியைச் சேர்ந்த சந்திர மௌலி மற்றும் தனது தம்பி முரளி, தாய் ராஜம்மாவுடன் சேர்ந்து தக்காளி பயிரிட்டுள்ளனர். இவர்கள் புலிச்சேரி மண்டலம் கரகமண்டாவில் 12 ஏக்கரிலும், சுவ்வாரபுபள்ளேயில்10 ஏக்கரிலும், தக்காளி சாகுபடி செய்துள்ளனர். பின்னர் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சந்திரமௌலி கர்நாடக மாநிலம் கோலார் சந்தையில் தக்காளியை விற்றுள்ளார்.
15 கிலோ தக்காளி பெட்டி ஒவ்வொன்றும், ரூ.1000 முதல் ரூ.1500 விலைக்கு விற்பனையாகியுள்ளது. மொத்தமாக 40 ஆயிரம் பெட்டிகளை சந்திரமௌலி விற்றுள்ளார். அதன் மூலம் அவருக்கு 45 நாட்களில் சுமார் ரூ.4 கோடி வருவாய் வந்துள்ளது. தக்காளி சாகுபடி முதலீடு ரூ.70 லட்சம், கமிஷன் 20 லட்சம், போக்குவரத்து செலவு ரூ.10 லட்சம் போக 3 கோடி சம்பாதித்துள்ளதாக மகிழ்ச்சியில் உள்ளார் சந்திரமௌலி.
எப்போதும் நஷ்டத்தை கொடுக்கும் தக்காளி இந்த முறை சந்திரமௌலியை கோடீஸ்வரராக மாற்றியுள்ளது.