ஆந்திராவில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா : காரணம் என்ன?
ஆந்திராவில் முதல் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளார். புதிய அமைச்சரவை வரும் 11ம் தேதி பதவியேற்க உள்ளது.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர் ஆட்சியமைத்த அடுத்த மாதத்துடன் 3 ஆண்டுகள் நிறைவுபெற உள்ளன. இந்த நிலையில் வரும் 11ம் தேதி அமைச்சரவையை மாற்றி அமைக்க ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.
இதில் புதுமுக பலருக்கு வாய்ப்பு அளிக்க அவர் முடிவு செய்துள்ளார். இதனிடையே நேற்று மாலை ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தனை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்துள்ளார். புதிய அமைச்சரவையில் 5 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு வசதியாக தற்போது அமைச்சர்களாக உள்ள 24 பேரும் இன்று ராஜினாமா செய்கின்றனர். இதனிடையே வரும் 2024 தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்த அமைச்சரவை மாற்றம் நடக்க உள்ளதாக ஆந்திர அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
புதிய அமைச்சரவையில் பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், முஸ்லீம்கள் உள்ளிட்டோருக்கு உரிய இடம் வழங்க ஜெகன் மோகன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.