காமராஜர் பெயரை நீக்கி விட்டு கலைஞர் பெயரைச் சூட்டுவதா? அன்புமணி !
திருத்தணி காய்கறி சந்தைக்கு காமராஜர் பெயரை நீக்கி விட்டு கலைஞர் பெயரைச் சூட்ட முயல்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருத்தணி
தமிழ்நாடு கண்ட தலை சிறந்த அரசியல் தலைவர்களில் காமராசர் குறிப்பிடத்தக்கவர். கலைஞராலும் அவர் மதித்துப் போற்றப்பட்டவர். அப்படிப்பட்டவரின் பெயரை நீக்கி விட்டு, கலைஞரின் பெயரை வலிந்து திணிக்க முயல்வது ஏற்புடையதல்ல. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் கலைஞருக்கு புகழ் சேர்க்க முடியாது.
மாறாக, நடுநிலையாளர்களின் வெறுப்புக்குத் தான் ஆளாக நேரிடும் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர வேண்டும். அதற்கும் மேலாக, ஓர் அரசியல் தலைவரின் பெயரை நீக்கி விட்டு, இன்னொரு தலைவரின் பெயரைச் சூட்டுவது அரசியல் நாகரிகமல்ல. அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வரும் போது பல கட்டிடங்களுக்கும், திட்டங்களுக்கும்
வைக்கப்பட்டுள்ள கலைஞரின் பெயரை நீக்கி விட்டு வேறு தலைவரின் பெயர் சூட்டப்பட்டால் அப்போது இன்றைய ஆட்சியாளர்களின் மனநிலை என்னவாக இருக்கும்? அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அதே உணர்வுடன் திருத்தணி சந்தைக்கு சூட்டப்பட்டுள்ள காமராசரின் பெயரை மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும்.
காமராஜர் பெயர்
திருத்தணி சந்தைக்கு காமராசரின் பெயர் மாற்றப்படுவதைக் கண்டித்து முதல் போர்க்குரல் காங்கிரஸ் கட்சியிடமிருந்து வந்திருக்க வேண்டும். ஆனால், திமுகவின் அங்கமாகவே மாறி விட்டதாலோ என்னவோ இது குறித்து அந்தக் கட்சி வாயைக் கூட திறக்கவில்லை.
திருத்தணி சந்தைக்கு காமராசரின் பெயரே நீடிக்க வேண்டும்; அவர் பெயரை நீக்கி விட்டு கலைஞர் பெயரைச் சூட்டும் முயற்சியை பாமக அனுமதிக்காது. தமிழக அரசு அதன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் அதைக் கண்டித்து தொடர் போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும்" எனத் தெரிவித்துள்ளார்.