ராகுல் காந்தி இதை சொன்னால் NDA கூட்டணியில் இருந்து விலக தயார் - அன்புமணி சவால்
மேகதாது அணை கட்டக்கூடாது என ராகுல் காந்தி சொன்னால் NDA கூட்டணியில் இருந்து விலக தயார் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம்
தமிழ்நாட்டிற்கு, 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், கர்நாடகா நீரை திறக்க மறுத்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் விவசாய அமைப்புகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றன.
முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3 ஆம் திகதி கர்நாடகாவிற்கு சென்று கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் உடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு தீவிர முயற்சித்து வருன் நிலையில் அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ், தமிழ்நாட்டில் ஆளும் தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.
அன்புமணி ராமதாஸ் சவால்
இதனிடையே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.

நேற்று நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் பேசிய அன்புமணி ராமதாஸ், "கர்நாடகா காங்கிரஸ் முதலமைச்சர் டி.கே. சிவகுமார், குழந்தையை கிள்ளி விடுவதும், இங்கிருக்கும் காங்கிரஸ் தொட்டிலை ஆட்டுவதுமாக நாடகம் நடத்திவருகிறார்கள்" என பேசியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், "நீங்கள் கேட்ட கேள்விக்கு மத்திய இணை அமைச்சர், “மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டிடம் அனுமதி பெற வேண்டாம்” என பதில் கொடுத்துள்ளார். இதனை எதிர்த்து, பாஜகவுக்கு நீங்கள் வழங்கி வரும் ஆதரவை திரும்ப பெறுவீர்களா, பதில் சொல்லுங்கள்" என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அன்புமணி ராமதாஸ், “ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி, கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக்கூடாது என ஒரு வார்த்தை சொல்வாரா? அப்படி ராகுல் காந்தி சொன்னால், நாங்கள் NDAவில் இருந்து விலகுகிறோம்" என கூறினார்.
இதற்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், "தமிழ்நாட்டிற்கு மேகதாது மிகப்பெரிய ஆபத்து. எனவே அதனை கட்டக்கூடாது என காங்கிரஸ் தலைவர்கள் கார்கே மற்றும் ராகுல் காந்தியிடம் சொல்வேன்.
காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. மோடிதான் ஆட்சியில் இருக்கிறார். அவர் ஆட்சியில் இருப்பதற்கு நீங்கள் ஆதரவு தருகிறீர்கள். பிரதமராக உள்ள மோடிக்கு உங்களின் ஆதரவை திரும்ப பெற்றால், அவர் மேகதாது அணைக்கு அனுமதிக்க மாட்டார்.
இதனைச் சொல்ல சொன்னால், சின்ன பிள்ளைத்தனமாக ராகுல் காந்தியை சொல்ல சொல்கிறீர்கள்.இது எந்த விதத்தில் நியாயம்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.