‘இப்படியே போனா நடுத்தெருவுக்கு வந்துருவாங்க’; ஆன்லைன் சூதாட்டத்துக்கு முடிவு எப்போது? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், “ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். ஆன்லைன் சூதாடுவதற்காக கொலைகளை செய்து கொள்ளையடித்தனர். இப்போது தொடர் சங்கிலிப் பறிப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொலை, கொள்ளைகளைத் தூண்டும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு முடிவு எப்போது? ஆன்லைன் சூதாட்டத்திற்கு உடனடியாக முடிவு கட்டப்படவில்லை என்றால், ஏராளமான குடும்பங்கள் தங்களின் குடும்ப தலைவர்களையும், உடமைகளையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்து விடும்.
வாழ வேண்டிய இளைஞர்கள் குற்றவாளிகளாகக்கூடும். இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க கொள்கை அளவில் தமிழக அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது.
அதற்கான தீர்வு புதிய சட்டமே தவிர, உச்சநீதிமன்ற மேல்முறையீடு அல்ல. எனவே, இனியும் தாமதிக்காமல் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி புதிய தடை சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்.” என வலியுருத்தியுள்ளார்.