அம்மா மீது சிறு துரும்பை கூட படவிட மாட்டேன்; நான் அடித்தேனா - அன்புமணி ஆவேசம்
அம்மா மீது சிறு துரும்பை கூட படவிட மாட்டேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
சென்னையில் பாமக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அன்புமணி ராமதாஸ், இந்த உலகில் எனக்கும் மிகவும் பிடித்தவர் எனது அம்மா தான்.
எனது அம்மா மீது சிறு துரும்பை கூட பட விடமாட்டேன். நான் எவ்வளவோ அவமானங்களை சந்தித்துள்ளேன். இதையும் கடந்து செல்வோம். பாமகவில் நிர்வாகிகளை மாற்ற ராமதாஸ்-க்கு அதிகாரம் இல்லை. கட்சித் தலைவராகிய எனக்கே அதிகாரம் உள்ளது.
பாமக மாநாடு
அதனால் நிர்வாகிகள் நீக்கம் தொடர்பான செய்திகளை பாமகவினர் நம்ப தேவையில்லை. நான் தலைவராக பொறுப்பேற்ற பின் என்னால் சுதந்திரமாக செயல்படவே முடியவில்லை. ஆனால் இன்றில் இருந்து என்னால் சுதந்திரமாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்.
எந்த சோதனை வந்தாலும் சாதனையாக மாற்றுவோம். நான் பார்த்து கொள்கிறேன். வரும் நாட்களில் பாமக தொண்டர்கள் தூள் செய்ய வேண்டும். இதற்கு மேல் நாம் வேகமாக செயல்பட வேண்டும். நீங்கள் எனக்கு அடி பணிந்தவர்கள் கிடையாது. என் சக தோழர்கள்.
நான் என்று கிடையாது.. இனி நாம். உலக அளவில் பாமக நடத்திய மாநாடு கவனம் பெற்றுள்ளது. மாநாடு நடத்துவதற்கான நிதியையும் நீங்கள் தான் கொடுத்தீர்கள். வரும் தேர்தலில் நமது கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். நாம் கூட்டணி ஆட்சி அமைக்க வேலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.