ராமதாஸ் நடத்துறது பொதுக்குழுவே இல்ல; அன்புமணி அறிவிப்பு - பரபரப்பில் பாமக
சேலத்தில் நடைபெறவிருக்கும் கூட்டம் பா.ம.க. பொதுக்குழு அல்ல என அன்புமணி தரப்பு கூறியுள்ளது.
பொதுக்குழு
வரும் டிசம்பர் 29ஆம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் வரும் 29&ஆம் தேதி சேலம் ஐந்து சாலை இரத்தினவேல் ஜெயக்குமார் திருமண அரங்கத்தில் நடைபெறும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்தகைய அறிவிப்பு எதையும் பாட்டாளி மக்கள் கட்சி தலைமை வெளியிடவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு விதிகள் 15, 16 ஆகியவற்றின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டமும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவர்,
பா.ம.க. தலைமை
பொதுச் செயலாளர் ஆகியோரால் கூட்டப்பட்டு, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் தலைமையில் தான் நடத்தப்பட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்திலும், தில்லி உயர்நீதிமன்றத்திலும் ஒரு தரப்பினர் தொடர்ந்த வழக்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுக்குழுவைக் கூட்டவும், அதற்கு தலைமையேற்கவும் அவரைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரை தவறாகப் பயன் படுத்தி சேலத்தில் சட்டவிரோதமாக செயற்குழு மற்றும் பொதுக்குழு என்ற பெயரில் ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறித்தும் தேர்தல் ஆணையத்திற்கு பா.ம.க. தலைமை முறைப்படி தெரிவித்திருக்கிறது.
எனவே, சேலத்தில் 29ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பாட்டாளி மக்கள் கட்சியை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்பதை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை அலுவலகம் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறது." என கூறப்பட்டுள்ளது.