இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்தாகிறதா? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்
மடிக்கணினி வழங்கும் திட்டம்
தமிழகத்தில் 2011-12 ம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது. 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி வந்த காலத்திலிருந்து மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது. தற்போது, திமுக ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆசிரியர்களுக்கு அரசுப் பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் தொடர்ந்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு கூடுதலான மடிக்கணினிகள் தேவைப்படுவதால், பள்ளிகளில் கையிருப்பில் உள்ள மடிக்கணினிகளை கணினி ஆய்வகங்களுக்கு வழங்க பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அனுமதி வழங்கினார்.
இதற்கிடையில் மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கும் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் பதில்
இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். இது குறித்து அவர் பேசுகையில், இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படாது. ஆனால், அதில் பல சிக்கல்கள் இருக்கிறது. சிக்கல்களுக்கு தீர்வு கண்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம். இதனால் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படாது. நிதிநிலையை ஆராய்ந்து படிப்படியாக மடிக்கணினி வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.