உக்ரைன் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்ய அதிபர் புதினின் ஆலோசகர் பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறினார்
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்ய அதிபர் புதினின் ஆலோசகர் அனடோலி சுபைஸ் பதவி விலகியுள்ளார்.
1990-களில் ரஷ்யாவின் பொருளாதார சீர்திருத்தங்களை பார்த்து பார்த்து செதுக்கி கட்டமைத்தவர்களில் மிக முக்கியமானவர் அனடோலி சுபைஸ். ரஷ்யாவின் தற்போதைய அதிபர் புதினின் வளர்ச்சியை ஆதரித்தவர்.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினின் ஆலோசகராக இருந்து வந்த அனடோலி சுபைஸ், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அதேபோல் கடந்த வாரம் அர்காடி டிவோர்கோவிச் என்ற பொருளாதார மேதையும் ரஷ்யாவுக்கான ஆலோசனைக் குழுவில் இருந்து விலகினார்.
அண்மையில் மக்கள் முன்னிலையில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீது தொடர்ந்திருக்கும் போரை ராணுவ நடவடிக்கை என்று குறிப்பிட்டு, அதனை விமர்சிப்பவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என கூறியிருந்தார்.
இதற்கு மத்தியில், உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு மாதமாக கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ள ரஷ்ய ராணுவம், தலைநகர் கீவை கைப்பற்ற உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளது.
இதனால், உக்ரைன் - ரஷ்ய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்வதாலும் இதனால் அப்பாவி பொதுமக்கள்: மற்றும் குழந்தைகள் உயிரிழப்பதாலும் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தனர்.
ஆனால் அவை யாவும் தோல்வியிலேயே முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.