கடற்கரையிலிருந்து மீனவர்களை விரட்டுவதற்கான முயற்சியா - சீமான் ஆவேசம்..!
அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம், நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையோரம் உள்ள மீன் கடைகள், மற்றும் உணவகங்களை அகற்ற உத்தரவிட்ட நிலையில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார்.
மீனவர்களுக்கு சீமான் ஆதரவு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மீனவர்கள் மீன் விற்கும் இந்தச் சாலையைப் பள்ளி மாணவர்கள் சென்று வருவதற்காகத்தான் எனத் தெரிவித்து அரசு இதைக் கையகப்படுத்திக்கொண்டது.
இந்தச் சாலையில், மீன்கடை வைத்திருப்பவர்கள் கட்டடமோ, தகரக் கொட்டகையோ அமைத்துக்கொண்டு இடத்தை ஆக்கிரமிக்கவில்லை.
பெரிய குடையை வைத்துக்கொண்டு அதன் நிழலில் அமர்ந்து, மீன் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். படகு கரை சேருகிற இந்தப் பகுதியிலிருந்து மீன்களை வாங்கி வந்து இங்கு விற்கிறார்கள்.
அவர்களின் வாழ்விடமும், வாழ்வாதாரமும் இந்தப் பகுதியில்தான் இருக்கிறது. நீங்கள் மீன் சந்தை கட்டித்தரும் வரை மீன்களை நாங்கள் விற்கக் கூடாதா?
கடற்கரையில் சமாதி கட்ட மட்டும் அனுமதியா?
கடற்கரையில் மீன் விற்கக் கூடாது எனத் தீர்ப்பு சொன்ன நீதிமன்றம்தான், உலகப் புகழ்பெற்ற உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையில் சமாதி கட்ட அனுமதி தந்தது.
கடற்கரையோரத்தில் மீன் விற்கக் கூடாதாம். ஆனால், கடலுக்குள் பேனா நினைவுச்சின்னம் வைக்கலாமா? இந்தக் கேள்விக்கு அரசிடம் பதில் இருக்கிறதா? சமாதி கட்டுவதில் காட்டும் ஆர்வம் சந்தையைக் கட்டுவதில் இல்லையே?
இவ்விடம் விட்டு வேறு இடத்தில் அரசு மீன் சந்தை கட்டித்தருகிறது எனில் இங்கிருந்து அந்தச் சந்தைக்கு மீன்களைத் தூக்கிக்கொண்டு போய் விற்பதற்கான தூக்குக் கூலியே எங்களின் உழைப்பை எடுத்துவிடுமே... அதற்கும் அரசிடம் பதில் இருக்காது" என்று ஆவேசத்துடன் கூறினார்.