வாயு கசிவால் 121 பேர் பாதிப்பு - ஆடை உற்பத்தி நிறுவனத்தை மூட உத்தரவு!
ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் ஏற்பட்ட வாயு கசிவில் பணியாளர்கள் 121 பேருக்கு மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டது.
வாயு கசிவு
ஆந்திர மாநிலம், அனகப்பள்ளி மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளது. இங்கு பல்வேறு தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. அந்த வகையில், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்று உள்ளது.

அந்த நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, அந்நிறுவனத்தில் உள்ள ஒரு இயந்திரத்தில் இருந்து தீடிரென வாயுக்கசிவு ஏற்பட்டது.
121 பேர் மயக்கம்
இதன் காரணமாக நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்த சுமார் 121 பெண் பணியாளர்களுக்கு மூச்சுத்திணறல், தலைசுற்றல், மயக்கம், வாந்தி உள்பட உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், மீட்புக்குழுவினர் விரைந்து வந்து ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனத்தில் ஏற்பட்ட வாயு கசிவால் பாதிக்கப்பட்ட பெண் பணியாளர்களை மீட்டு உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, ஆடை உற்பத்தி நிறுவனத்தை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.