மோசமான வானிலை: தாம்பரத்தில் தரையிறங்கிய அமித் ஷா ஹெலிகாப்டர்
புதுச்சேரியில் நடைபெற்ற குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி வழங்கும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
புதுச்சேரி காவல் துறையின் சிறப்பான சேவையைப் பாராட்டி நடைபெற்ற இவ்விழாவில், காவல் துறை இயக்குநர் ஷாலினி சிங்கிடம் குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடியை அமித் ஷா வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், புதுச்சேரி காவல் துறையின் வீரம் மற்றும் சிறப்பான சேவையைப் பாராட்டினார். மேலும், கடந்த 12 ஆண்டுகளில் புதுச்சேரிக்கு மத்திய அரசு ரூ.13,762 கோடி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அமித் ஷா பயணத்தில் தாமதம்
இதையடுத்து, புதுச்சேரியில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை சுமார் 3 மணியளவில் சென்னை வந்துகொண்டிருந்த அமித் ஷாவின் ஹெலிகாப்டர், சென்னை விமான நிலையப் பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக அங்கு தரையிறங்க முடியவில்லை.இதனால், ஹெலிகாப்டர் தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டது.
அங்கிருந்து கார் மூலம் சென்னை விமான நிலையம் சென்று, பின்னர் தனி விமானத்தில் அமித் ஷா டெல்லி புறப்பட்டுச் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மோசமான வானிலை காரணமாக அவரது டெல்லி பயணம் ஓரிரு மணி நேரம் தாமதமாகலாம் எனக் கூறப்படுகிறது.