தமிழர்கள் தமிழ் மொழியுடன் இந்தியையும் கற்க வேண்டும் - மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு!
தமிழர்கள் தமிழ் மொழியுடன் இந்தியையும் கற்க வேண்டும் என்று அமித் ஷா பேசியுள்ளார்.
மொழி விவகாரம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்ந்து இந்தி மொழி கற்றுக் கொள்ளுங்கள் என்று பேசி வருகிறார். அண்மையால் நடைபெற்ற அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழுவின் 38வது கூட்டத்தில் பேசிய அமித்ஷா 'இந்தி உள்ளூர் மொழிகளுடன் போட்டியிடவில்லை,
அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பதன் மூலம் மட்டுமே தேசம் அதிகாரம் பெறும். அலுவல் மொழியை ஏற்றுக்கொள்வது சட்டம் அல்லது சுற்றறிக்கையிலிருந்து வரவில்லை, மாறாக நல்லெண்ணம், உத்வேகம் மற்றும் ஊக்கத்திலிருந்து வருகிறது என பேசியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'இதைக் கேட்டு நடப்பதற்கு தமிழ்நாடு தலையாட்டி பொம்மை அல்ல. 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள்' என்று எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
அமித்ஷா பேச்சு
இந்நிலையில் தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத் ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா 'ஆங்கில மொழியுடன் ஜெர்மன், பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளை குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும்.
குஜராத்திகள் குஜராத்தி மொழியுடன் இந்தியை கற்க வேண்டும். அஸ்ஸாமியர்கள், அஸ்ஸாமி மொழியுடன் இந்தியை கற்க வேண்டும்; தமிழர்கள், தமிழ் மொழியுடன் இந்தியையும் கற்க வேண்டும். அப்படி நடந்தால் நமது நாட்டின் வளர்ச்சியை எவராலும் தடுத்துவிட முடியாது.
உபநிடதங்கள், வேதங்கள், சமஸ்கிருதத்தில் மட்டுமே உலகம் முழுவதற்குமான அறிவுகளஞ்சியம் இருக்கிறது. ஆகையால் இதனை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அமித்ஷா பேசியுள்ளார்.