மோடி, அமித் ஷா கால்களில் முதல்வர் பழனிசாமி விழுந்து கிடப்பதா? ராகுல் காந்தி ஆவேசம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒருவாரமே உள்ள நிலையில் பிரதான கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய கட்சிகளின் தலைவர்களும் தமிழகம் நோக்கி விரைந்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
காலை 11 மணிக்கு சென்னை வந்தடைந்த ராகுல் காந்தி சென்னை அடையாறில் வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மெளலானாவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது, “தமிழகம், தமிழகத்தில் இருந்து ஆளப்படும் ஆட்சிமுறையை விரும்புகிறேன். அனைத்து மொழிகளுக்கும் மரியாதை என்பதே இந்தியாவின் மையமாக இருக்கவேண்டும். தமிழக மக்கள் அனைவரும் எனக்கு சகோதர சகோதரிகள்.
அனைத்து மொழிகளின் பெருமையும் சேர்ந்ததுதான் இந்தியா. டெல்லியில் இருந்து ஆட்சி செய்யாமல் தமிழகத்தில் இருந்து ஆட்சி முறை செய்ய வேண்டும்.
எனக்கு கீழ் கும்பிடு போட்டு நில் என்பதை பாஜகவின் சித்தாந்தம்; அனைவரையும் அரவணைப்பது என்பது காங்கிரசின் சித்தாந்தம். பாஜகவுக்கு யார் சென்றாலும் அக்கட்சி தலைவர்களின் காலை தொட்டு வணங்க வேண்டும்; சம மதிப்பு தராத எந்த உறவும் பயனற்ற உறவாகும்.அனைவரையும் அடிபணிய வைப்பது ஆர்.எஸ்.எஸ். பாஜக, மோடியின் சித்தாந்தம்” என்றார்.
இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி மதியம் 3 மணிக்கு சேலம் செல்கிறார். அங்கு நடைபெறும் பிரம்மாண்ட கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் பங்கேற்கிறார்.