அமித்ஷா வருகையால் தலைகீழாக மாறிய ஐபிஎல் இறுதிப்போட்டி ... இங்கேயும் அரசியலா?
ஐபிஎல் இறுதிப் போட்டியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காண வந்த நிலையில் ரசிகர்கள் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. அஹமதாபாத் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அறிமுகமான முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இதனிடையே ஐபிஎல் இறுதிப் போட்டியை காண பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்கள் கழித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது குடும்பத்தினருடன் வந்து போட்டியை ரசிகர்களுடன் கண்டு களித்தார். அதுவரைக்கும் நன்றாக விளையாடிய ராஜஸ்தான் அணி அமித்ஷா வந்ததும் தலைகீழாக ஆடத் தொடங்கினர்.
இதனால் கடந்த 16 போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அந்த அணி இறுதிப்போட்டியில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதற்கு காரணம் அமித்ஷா வருகை தான் என ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். குஜராத் தனது சொந்த மாநிலம் என்பதால் அமித்ஷாவும் குஜராத்துக்கு ஆதரவாக நேற்று மைதானத்துக்கு வந்திருந்த நிலையில் அந்த அணி விக்கெட் எடுக்கும் போது எல்லாம் அமித்ஷா அதனை கைத்தட்டி கொண்டாடினார்.
இதனால் தனது அரசியல் ஆட்டத்தை மைதானத்திலும் அமித்ஷா ஆடி விட்டதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.