மனைவிக்கு 17 கத்திக்குத்து; காரை ஏற்றி இறக்கி கொன்ற கணவன் - ஆனால் நீதிமன்ற தீர்ப்பில் ட்விஸ்ட்!
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி கணவர் ஒருவர் தனது மனைவியை 17 முறை கத்தியால் குத்தி, காரை ஏற்றி இறக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது.
கணவன்-மனைவி தகராறு
அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதி பிலிப் மேத்யூ-மெரின் ஜாய். கடந்த 2020ம் ஆண்டிலிருந்து இவர்களுக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் ஒருகட்டத்தில் கணவனை பிரிந்து வாழ மெரின் ஜாய் (26) முடிவு செய்தார். ஆனால் மனைவி தன்னை விட்டுப் பிரிந்து வாழ்வதை ஆசைப்படாத பிலிப் மேத்யூ, மனைவி மெரின் ஜாயை சமாதானப்படுத்த முயன்றார். அதற்கு, சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல், மனம் புண்படாமல் நடந்து கொண்டால், ஒன்றாக வாழ்வதற்கு மெரின் ஜாய் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் வேலைக்கு கிளம்பிச் சென்ற மெரின் ஜாய், அன்றைய தினம் வீட்டுக்கு வரவில்லை.
வெகு நேரமாகியும் மனைவி வீடு திரும்பாததால், ஒருவேளை தன்னைவிட்டு மனைவி பிரிந்து போய்விட்டாரோ? என்று பிலிப் மேத்யூ சந்தேகப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர், மனைவி நர்சாக பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மெரின் ஜாய் வீட்டிற்கு புறப்படுவதற்காக பார்க்கிங் ஏரியாவில் உள்ள காரை எடுக்கச் சென்றுள்ளார். மனைவியை பார்க்கிங் ஏரியாவில் பார்த்ததுமே, கடும் ஆவேசம் அடைந்த பிலிப் மேத்யூ, தான் ஓட்டிச்சென்ற காரால் மனைவி மீது வேகமாக மோதினார்.
மனைவி கொலை
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார் மெரின். இருந்தும் ஆத்திரம் அடங்காத பிலிப் மேத்யூ கத்தியால் அவரை 17 முறை ஆவேசமாக குத்தினார். இதில் ரத்தம் கொட்டி, தரையிலேயே துடிதுடித்தார் மெரின்.
மேலும், மனைவியை தரையில் கிடத்தி அவரின் உடல் மீது முன்னும் பின்னுமாக காரை ஏற்றி ஏற்றி இறக்கினார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகும் உயிரோடு இருந்த மெரின் ஜாய், தன் மீதான கொலைவெறித் தாக்குதல் நடத்திய கணவன் பிலிப் குறித்து மரண வாக்குமூலம் தந்த பின்னரே இறந்தார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த புளோரிடா நீதிமன்றம் அந்த கொடூர கணவனுக்கு மரண தண்டனை கொடுக்க முடிவு செய்தது. ஆனால் ஒருகாலத்தில் தனது மனைவியை நெருக்கமாகவும், அந்நியோன்யமாகவும், பாசமாகவும் வாழ்ந்த தருணங்களை எல்லாம் ஆதாரங்களாக நீதிமன்றத்தில் முன் வைத்துள்ளார் குற்றவாளியின் வழக்கறிஞர். இவற்றைப் பரிசீலித்த நீதிமன்றம். பிலிப் மேத்யூவின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது.