அமெரிக்கா சார்பில் புலம் பெயர்ந்த சாதனையாளர்கள் - இந்திய வம்சாவளி பெண் பங்கேற்பு!
அமெரிக்க தூதரகம் சார்பில் ஜூலை 28-ம் தேதி நடைபெறும் நாசா பொறியாளர் ஸ்வாதி மோகனுடன் இணையவழி கலந்துரையாடல் நிகழ்வில் பல்வேறு துறை சாதனையாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
அமெரிக்கா தூதரகம் சார்பில் நாசா பொறியாளர் ஸ்வாதி மோகனுடன் கலந்துரையாடல் நிகழ்வுஜூலை 28-ம் தேதி இணையவழியில் நடைபெறுகிறது. சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் சார்பில் ‘புலம் பெயர்ந்தசாதனையாளர்கள்’என்ற தலைப்பில் இணையவழியிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த நிகழ்ச்சிகளில் அமெரிக்காவில் கல்வி, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்த புலம் பெயர்ந்த இந்தியர்கள் பங்கேற்று தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சித் தொடர்,ஜூலை 28-ம் தேதி தொடங்கவுள்ளது.
முதல் நிகழ்வில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா பொறியாளர் ஸ்வாதி மோகன் பங்கேற்று கலந்துரையாடுகிறார். இவர் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் பொறியியல் குழுவில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறார். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நாசாவின் ரோவர் வாகனத்தை வெற்றிகரமாக தரை இறக்கிய திட்டப்பணிகளில் ஸ்வாதி மோகன் முக்கிய பங்காற்றினார்.
நிகழ்ச்சியில் இந்தியாவுடனான குடும்ப உறவு, செவ்வாய் கிரக திட்டத்தில் பணியாற்றிய அனுபவங்கள் மற்றும் அறிவியல் துறைகளில் பெண்களின்
பங்களிப்பு குறித்த தனது கருத்துகளை ஸ்வாதி மோகன் பகிர்ந்து கொள்வார்.