அமெரிக்காவில் ஜோ பைடன் பதவியேற்றதும் செய்யும் முதல் வேலை!
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதும், மக்களுக்கு கொரோனா நிதி வழங்கும் மசோதாவுக்கு முக்கியத்துவம் அளிப்பார் என கூறப்படுகிறது. கொரோனா தொற்றில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது அமெரிக்கா. உயிரிழப்புகளும் அதிகரிக்க பொருளாதார ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். இந்நிலையில் வேலையிழந்தவர்களுக்கு முதற்கட்டமான கொரோனா நிதிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஒவ்வொரு நபருக்கும் 600 டாலர் நிதி வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த மசோதா பிரதிநிதிகள் சபையில் நிறைவேறினாலும், செனட் சபையில் அப்போது பெரும்பான்மையாக இருந்த குடியரசுக் கட்சியினரே இந்த மசோதா நிறைவேற விடாமல் தடுத்தனர். இந்நிலையில், புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், 600 டாலர் என்பது மிகவும் குறைவான தொகை என்று கூறியுள்ளார்.
வாடகை செலுத்துவது, உணவுத் தேவையை சமாளிப்பது என்று வரும்போது 600 டாலர் போதாது. எனவே, மக்களுக்குத் தற்போது தலா 2 ஆயிரம் டாலர் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் பைடன் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளார். இப்போது பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையாக உள்ளனர்.
ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றபின், இது தொடர்பான மசோதாவுக்கு முக்கியத்துவம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.