நாட்டை விட்டு வெளியேற தயார்... - அமீர் ஆவேசம்
கேஜிஎப் திரைப்படத்தின் வெற்றி குறித்து சமீபத்தில் பேசிய சுதீப் பான் இந்தியா படம் கன்னடத்தில் எடுக்கப்பட்டதாக கூறினார்கள் அதில் ஒரு சிறிய திருத்தம் செய்ய நான் விரும்புகிறேன். இந்தி இனி தேசிய மொழி அல்ல என கூறியிருந்தார்.
இதற்கு பதிலடியாக, நடிகர் அஜய்தேவ்கான் தனது டுவிட்டர் பதிவில், உங்களின் கருத்துபடி இந்தி தேசியமொழி இல்லை என்றால் ஏன் கன்னட படங்களை மொழி மாற்றம் செய்து இந்தியில் வெளியிடுகிறீர்கள்? இந்தி தான் நமது தேசிய மொழி என இந்தியில் டுவீட் செய்திருந்தார்.
இதனையடுத்து, இந்த டுவிட்டர் பதிவிற்கு பதிலளித்த சுதீப், ‘இந்தியில் நீங்கள் அனுப்பிய கருத்து எனக்கு புரிகிறது இந்தி மொழியை நாம் அனைவரும் நேசித்து கற்றுக்கொள்வோம். குற்றமில்லை சார். ஆனால் உங்கள் கேள்விக்கு எனது பதிலை கன்னட மொழியில் பதிவு செய்திருந்தால் நிலைமை என்னவாகும் என்று யோசித்தேன். நாங்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் அல்லவா.?” என பதிலளித்தார்.
அதற்கு நடிகர் அஜய் தேவ் கான், ‘நீங்கள் என் நண்பர். நான் தவறாக புரிந்துகொண்டதை தெளிவுபடுத்தியதற்கு நன்றி. எப்போதும் நமது துறை ஒன்று என்றே நான் கருதி வருகிறேன். நாம் எல்லா மொழிகளையும் நேசிக்கிறோம். அதே போல எல்லோரும் நமது மொழிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என பதிவிட்டிருந்தார்.
இதனால், சமூகவலைத்தளங்களில் இந்தி மொழி குறித்து சினிமா பிரபலங்கள் மோதிக்கொண்டு வருகிறார்கள்.
இந்திக்கு ஆதரவாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் சஞ்சய் நிஷாத் பேசுகையில், “நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால் இந்தியை நேசிக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் வெளிநாட்டவராக கருதப்படுவீர்கள். இந்தி பேச முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது செல்லுங்கள்” என்று கூறியுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், இயக்குநரும், நடிகருமான அமீர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், இந்தி தெரியாத மக்கள் வெளியேற வேண்டும் என சொல்கிறார்கள். நாட்டை விட்டு வெளியேற தயார். எது நாடு, யார் யார் இன மக்கள் என சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் ஆரியம் காலூன்றி வருகிறது. இந்தி பேச வேண்டும் என சொல்வது தான் பாசிசம் என்று பதிவிட்டுள்ளார்.