சென்னையில் நீட் எதிர்ப்பு போராட்டம் - தவெக, திமுகவை விமர்சித்த இயக்குநர் அமீர்
சென்னையில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில், இயக்குநர் அமீர் தவெக மற்றும் திமுகவை விமர்சித்துள்ளார்.
சென்னையில் திரைத்துறையினர் போராட்டம்
டெல்லியில் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவாக சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னையில் எழும்பூரில் உள்ள ராஜராத்திரத்தினம் மைதானத்தில் நீலம் மாணவர்கள் அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், லெனின் பாரதி, நடிகைகள் ஆண்ட்ரியா, ரேவதி, நடிகர் மன்சூர் அலி கான், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், எழுத்தாளர் கரண் கார்கி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், நீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேசினர்.
அமீர் விமர்சனம்
இதில் பேசிய இயக்குநர் அமீர், "ஜனநாயகத்தை காப்பாற்ற ஒரு சிறிய கூட்டம் போராடிக்கொண்டுள்ள சூழலில் ஜனநாயகன் திரைப்படத்தை காப்பாற்ற ஒரு பெரிய கூட்டம் போராடி கொண்டுள்ளது. ஆனால் இந்த கூட்டம் அவர்களை விட அறிவார்ந்த கூட்டம்.

10 ஆண்டுகளாக நீட்டிற்கு எதிராக போராடி வருகிறோம். நீட் வருவதற்கு முன்பே சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நான், வெற்றிமாறன், திருமுருகன் காந்தி எல்லாம் பேசினோம். அனிதாவின் மரணத்தில் தொடங்கிய ஓலம் நிற்கவே இல்லை.
நீட்டை கொண்டு வராமல் நாங்கள்பார்த்துக்கொள்வோம், அதற்கான ரகசியம் எங்க கிட்ட இருக்குனு சிலர் சொல்லுவாங்க. அவங்களும் ஆண்டு முடிச்சிட்டு போயிடுவாங்க. அந்த ரகசியத்தை சொல்லவும் இல்லை. தடைக்கான வழியும் இல்லை.
அனிதாவின் மரணத்திற்கு ஆதரவு கொடுக்க வீட்டிற்கு சென்றவர்களும் அதிகாரத்தில் இருப்பாங்க.. ஆனால் அவங்களும் செய்ய மாட்டாங்க. இந்த ஆட்சியாளர்கள் நீட்டிற்கு எதிரான நிலையை கொண்டு வருவார்கள் என நம்பிகிட்டு இருப்பது ஒரு ஏமாற்று வேலை.
அதை எந்த அரசும் செய்யாது. அவங்களுக்கு அரசியல் என்பது பிழைப்புவாதம், அதனை தொடர்ச்சியாக செய்துகொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த அதிகாரத்தை எதிர்த்து நின்று கொண்டிருப்பது உங்களை போன்ற நம்பிக்கை கொண்ட கூட்டம் தான்.
ஜேம்ஸ் வசந்தன் சொன்னார் தமிழ்நாடு எப்போதும் சிந்திக்கிற கூட்டம் என. அந்த பெயர் எல்லாம் போய் விட்டது. இப்போது வெளிய சொல்ல முடியல. இன்னமும் அதை சொல்லி மூளையை மசாஜ் பண்ணிகிட்டே இருக்காதிங்க.
அந்த கூட்டம் எல்லாம் அப்படியே திரும்பி போனிங்கனா அங்க ஒரு தியேட்டர் இருக்குது, அங்க நிக்குது.அதெல்லாம் இருந்தது அந்த கூட்டத்தை ஒருத்தரு எடுத்துட்டு போயிட்டாரு.
அப்படி தான் மூளை சலவை செஞ்சிகிட்டே இருப்பாங்க மதத்தை சொல்லி இழுத்துட்டு போவான், சாதியை சொல்லி இழுத்துட்டு போவான். இல்லை வேற ஒரு கவர்ச்சியை சொல்லி அப்படியே இழுத்துட்டு போயிடுவாங்க" என பேசியுள்ளார்.