5 வயது சிறுமி பாலியல் கொலை சம்பவம்; குற்றவாளிக்கு தூக்கு! குழந்தைகள் தினத்தில் நீதிமன்றம் அதிரடி!
கேரளா மாநிலத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை
கேரளா மாநிலம் முக்கம் பகுதியில் வசித்து வந்த பீகார் மாநில தம்பதியின் 5 வயது மகள் கடந்த ஜூலை மாதம் வீட்டிலிருந்து மாயமானார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அதேபகுதியில் வசித்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி அஸ்பக் ஆலம் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அஸ்பக் ஆலம் மீது பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குற்றவாளிக்கு தூக்கு
இந்த வழக்கனது கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் அஸ்பக் ஆலம் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், அவருக்கு தூக்குத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், குற்றவாளி அஸ்பக் ஆலமிற்கு 5 ஆயுள் தண்டனைகளையும் விதித்த நீதிமன்றம், குற்றவாளி 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவும் அதிரடி உத்தரவிட்டுள்ளது. விசாரணை தொடங்கி 110 நாட்களில் எர்ணாகுளம் போக்ஸோ நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.