"ஆல் பாஸ் அறிவிப்பு ஏற்க முடியாது" - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அரியர் தேர்வு ரத்து செய்து "ஆல் பாஸ்" என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. கொரோனா அதிவேகமாக பரவியதால் தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, தமிகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பின்னர் மக்களின் வாழ்வாதாரங்களை கணக்கில் கொண்டு தமிழக அரசு சில தளர்வுகளை அளித்தது.
இதனையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து பட்டப் படிப்புக்களுக்கு இறுதிப் பருவத்தேர்வு தவிர, மற்ற பருவ தேர்வுகள் ரத்து செய்வதாகவும், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை எதிர்த்து கடந்த அக்டோபர் மாதம் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்பட 2 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்கள்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அரியர் தேர்வு ரத்து செய்து "ஆல் பாஸ்" என அறிவித்து, பிறப்பித்த அரசின் உத்தரவை ஏற்க முடியாது என்றும், அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், கல்வி புனிதத்தில் சமரசம் செய்து கொள்ளாமல், தேர்வு நடத்துவதில் யூ.ஜி.சி., தமிழக அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.