தேர்வு எழுத தேவையில்லை...1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் பாஸ்.. அதிரடி அறிவிப்பு

By Petchi Avudaiappan Apr 27, 2022 05:37 PM GMT
Report

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சிப் பெற்றுள்ளதாக புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

கொரோனா 2வது அலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதனிடையே தொற்று குறைந்த நிலையில் புதுச்சேரியில் கடந்த ஜனவரி மாதம் முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 

இதில் விருப்பம் உள்ளவர்கள் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்ட நிலையில் மற்றவர்களுக்கு ஆன்லைன் மூலம் தொடர்ந்து வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால் மாணவர்களுக்கு முழு பாடங்களும் நடத்தி முடிக்கப்படாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் தேர்வுகளில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனைக் கருத்தில் கொண்டு , புதுச்சேரியில் ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.