தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார்! மாவீரர் அழகு முத்துக்கோன் பிறந்த தினம் இன்று!
யார் இந்த மாவீரர் அழகு முத்து கோன்?
தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார் என்று கர்ஜனையிட்ட அழகுமுத்துக்கோனின் 311வது பிறந்த தினம் இன்று.
தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது.
அவனைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள். ``எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. `ம்' என்றால் பீரங்கிகள் முழங்கும். அழகுமுத்துக்கோனும் அவனது வீரர்களும் உடல் சிதறிப் போவார்கள்.
அதைப் பொறுக்கமாட்டாமல்தான் அன்றைய நடுக்காட்டுச் சீமை பாளம்பாளமாய் வெடித்து சுட்டு எரித்துக்கொண்டிருந்தது. ``மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால் உயிர் மிஞ்சும் என்று கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், ``தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார் என்ற அழகுமுத்துக் கோனின் கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது.
இதனால் ஆத்திரமடைந்து 248 வீரர்களின் தோள்களும் கும்பினிப்படையால் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும், வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள். பீரங்கிகளும் வெடித்துச் சிதறின.
வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை. இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் முதல் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன். தாய்மண்ணை அடிமைப்படுத்த நினைத்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சுதந்திர முழக்கமிட்ட வீரனைத் தந்து, யாதவ சமூகம் பெருமை தேடிக் கொண்டது.
அழகுமுத்து கோன் சிலைகள்:
அமைச்சர் திரு ராஜகண்ணப்பன் அவர்களின் முயர்ச்சியில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் முன்பு 1996 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் வீரன் அழ்குமுத்து கோன் சிலையை திறந்துவைத்தார்.
கட்டாலங்ககுளத்தில் அழகுமுத்துகோன் மணிமண்டபம் கட்டப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும் தமிழக அரசு புதுக்கோட்டை கோட்ட பேருந்துகளை வீரன் அழகுமுத்துகோன் பெயரில் இயக்கியது.
மதுரை யாதவர் கல்லூரியில் வீரன் அழகுமுத்து கோன் சிலையை அப்போதய பீகார் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் திறந்துவைத்தார்.
பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக அரசு மதுரை மாவட்டத்தை இரண்டாக பிரித்து வீரன் அழகுமுத்து கோன் தேனி மாவட்டத்தை உருவாக்கியது.
இவரது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர், அமைச்சர்கள் என பலரும் அவரது உருவப்படத்திற்கும், திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.