துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வெல்வாரா அஜித் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்க உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், சமீபமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.இதற்காகப் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் சென்னை துப்பாக்கி சுடுதல் கிளப்புக்குச் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு 6 பதக்கங்களை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த வெற்றிக்காக அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் அஜித்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் பங்கேற்கவுள்ளார். இதற்காக தீவிரமாகத் துப்பாக்கி சுடுதல் பயிற்சி எடுத்து வருகிறார். அஜித் கண்டிப்பாக பதக்கம் ஜெயித்துவிடுவார் என்று அவருடைய ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.