ஹெலிகாப்டர் விபத்து - உதவிய கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்த விமானப்படை
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தின் போது உதவிய கிராம மக்களுக்கு விமானப்படை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக சூலூர் விமானப்படை தளத்தில் முப்படை இராணுவ அதிகாரிகளின் Mi-17V5 ரக ஹெலிகாப்டர் மூலம் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் 12 இதர இராணுவ அதிகாரிகள் பயணம் செய்தனர்.
இந்த ஹெலிகாப்டர் விமானம் அருகில் குன்னூர் இராணுவப்பயிற்சி கல்லூரி மேல்குன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நஞ்சப்ப சத்திரம் என்ற இடத்தில் திடீரென அருகில் இருந்த வனப்பகுதிக்குள் விழுந்து நொறுங்கி தீப்பற்றிக்கொண்டது.
இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் சோகத்தை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே பற்றி அறிந்த உடனேயே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தின் போது உதவிய கிராம மக்களுக்கு விமானப்படை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
நஞ்சப்ப சத்திரம் கிராம மக்களுக்கு அரிசி, பருப்பு, உப்பு, சர்க்கரை என மளிகை பொருட்களை வழங்கிய இந்திய விமானப்படையினர், அம்மக்களுக்ககு கைகூப்பி வணங்கி நன்றிகளை தெரிவித்து கொண்டனர். மேலும் இந்திய விமான படை சார்பில் மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.