வயிற்று வலியால் துடித்தவருக்கு எய்ட்ஸ் சிகிச்சை அளித்த அதிர்ச்சி சம்பவம்!
வயிற்று வலியால் அவதி பட்டவருக்கு, எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் நயினார் கோயில் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான முதியவர் ஒருவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதி பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் வயிற்று வலியால் துடித்த அந்த முதியவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் எயிட்ஸ் நோயை ஏற்படுத்தக்கூடிய எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கூறியுள்ளனர்.
இதை தொடர்ந்து, மதுரை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்ட அவருக்கு, அங்கு பலநாட்கள் எச்.ஐ.வி. சிகிச்சைக்கான மருந்து வழங்கப்பட்டு உள்ளது.
ஆனால், வயிற்று வலி குறையாததால் அந்த முதியவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அங்கு அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பதை கண்டுப்பிடித்துள்ளனர், மேலும் அதற்கான அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர்.
இந்நிலையில், வயிற்று வலி குணமாகி வீடு திரும்பிய அவர், மீண்டும் அரசு மருத்துவக் கல்லூரி சென்றபோது எய்ட்ஸ் இல்லை எனக் கூறி மன்னிப்புக் கேட்டுள்ளனர்.
அலட்சியம் காரணமாக வயிற்று வலியால் அவதிபட்ட முதியவருக்கு எய்ட்ஸ் என்று கூறிய மருத்துவர்கள், அலுவலர்கள், ஆய்வக நுட்பணர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.