திமுக அரசை கண்டித்து அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றது.
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும், பயிர் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
பொங்கல் பரிசு தொகையை அறிவிக்க வேண்டும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்தது.
அத்துடன் தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடியிலும், எடப்பாடி கே பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியிலும் , துணை ஒருங்கிணைப்பாளர் கே;முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் தங்கள் சொந்த மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.
சென்னையை பொருத்தவரை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ராயபுரம் ,வள்ளுவர் கோட்டம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஐந்து மாவட்ட செயலாளர்கள் பங்கேற்று பங்கேற்க உள்ளனர்.