கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள்!
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க ஈபிஎஸ் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கறுப்பு உடை அணிந்து வந்தனர்.
சட்டப்பேரவை
சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கப்பட்ட நிலையில் ஆளுநர் தமிழ்நாடு அரசு அச்சிட்டு தந்த வாசகங்களை படிக்காமல் வேண்டுமென்றே தவிர்த்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஆளுநரின் செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வருத்தத்தை பதிவு செய்து கொண்டதுடன் அவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தார்.
கருப்பு சட்டை
இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் இன்று பதிலளிக்க உள்ளனர். அதில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்ததாக தெரிகிறது. இருப்பினும் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வழக்கம் போல வெள்ளை சட்டையில் வந்துள்ளனர்.