அதிமுக அமைச்சருக்கு எதிர்ப்பு: போராடியவர்களை உதவியாளர்கள் தாக்கியதால் பரபரப்பு
ஆவடியில் அதிமுகவுக்கு எதிராக பரப்புரை மேற்கொண்ட நீட் எதிர்ப்பு கூட்டமைப்பினரை அமைச்சர் பாண்டியராஜனின் உதவியாளர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடி சட்டமன்ற தொகுதியில் நீட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் பரப்புரை மேற்கொண்டனர்.
அப்போது நீட் தேர்வுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக துண்டு பிரசுரம் அடித்து வீதிவீதியாக வழங்கி வந்தனர்.
இதனை அறிந்த அமைச்சரின் உதவியாளர்கள் மற்றும் அதிமுகவினர் நீட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் வந்த காரை மடக்கி அதிலிருந்த நிர்வாகிகளை அடித்து உதைத்தனர். இதைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த ஆவடி காவல்துறையினர் இருதரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு பின்னர் நீட் தேர்வு எதிர்ப்பு கூட்டமைப்பினரை அனுப்பி வைத்தனர்.
அமைச்சர் ஆதரவாளர்களின் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.