ஆடு, மாடு, கோழி என குவியும் சீர்வரிசைகள் - திக்குமுக்காடும் எடப்பாடி பழனிச்சாமி
அதிமுகவின் பொதுச்செயலாளரான ஈபிஎஸ்-க்கு ஆடு, மாடு, கோழி, தேங்காய் பழம், இனிப்பு என சீர்வரிசைகள் குவிந்து வருகிறது.
பொதுச் செயலாளர்
அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தாரை தப்பட்டை முழங்க ஆடு மாடு கோழி என சீர்வரிசைகளை அளித்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து, சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில் தங்கி உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் வந்து நேரில் சந்தித்தார்.
குவியும் வாழ்த்து
அப்போது வாழைப்பழம், பலா, மாம்பழம் என பல்வேறு வகையான பழங்களை கொண்ட 30 தட்டுகள் மற்றும் ஆட்டுக்குட்டி, பசு மாடு, கன்று குட்டி, கோழி உள்ளிட்ட சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக வந்து வாழ்த்து தெரிவித்தார். அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“அதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதை அடுத்து கழகம் ஒரு எழுச்சி கண்டுள்ளது. இனி முழுவேகத்தோடும் முழுமையான வலிமையோடு அதிமுக மிளிரும். கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைவர், அதிமுக பொதுச் செயலாளர் தெளிவுபடுத்திவிட்ட பிறகு இது போன்ற கருத்து தொடர்பான கேள்விகள் தேவையில்லை.
மத்திய சுகாதாரத்துறையிடமிருந்து வரபெற்ற தகவலை அடுத்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் அதிமுக சார்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசு கொரோனாவை எச்சரிக்கையோடு எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். மத்திய அரசு எப்போதுமே மருந்துகளை கொடுக்காது , மாநில அரசு தான் வாங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.