அதிமுக மாவட்ட செயலாளர்கள் சென்னையில் ஆஜராக வேண்டும்: தலைமை உத்தரவு
தேர்தல் தேதி நெருங்க நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வருகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடுகளை இறுதி செய்யும் பணியில் கட்சிகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் இன்று மாலை சென்னையில் இருக்க வேண்டும் என்று அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் தேர்வு ஒரிரு நாளில் இறுதி செய்யப்பட உள்ளதால் மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
பாமக-விற்கு 23 தொகுதிகளும், பாஜக-விற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது என்று கூறப்படுகிறது.
வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதிக்கு முன்பாக தொகுதி ஒதுக்கீடு வேட்பாளர் தேர்வு ஆகியவற்றை இறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் அனைத்து கட்சிகளும் உள்ளன.