அதிமுக - பாஜக கூட்டணி உடைகிறதா..! காரணம் என்ன?
தமிழகத்திலுள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் என்று முன்னதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழகத்திலுள்ள மொத்த 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் 12,838 பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களை தமிழக கட்சிகள் தேர்வு செய்து வருகின்றனர்.
மேலும் ஆளும் கட்சியான திமுக தன்னுடைய கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அதிமுகவும் தனது கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான பாஜகவுடன்பேச்சுவார்தையை நடத்தியது.
இதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அதிமுக போட்டியிடும் பெரும்பாலான இடங்களை பாஜக கேட்பதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி அதிமுக போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடங்களை பாஜக கேட்பதாக கூறியுள்ளார்.
அதிமுக போட்டியிடக் கூடிய சேலம்,ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் அதிக இடங்களை பாஜக கேட்பதால் பாஜகவுடனான பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பாஜக கேட்கும் இடங்களை அதிமுக கொடுக்க கூடாது என அதிமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர். இதனால் அதிமுக - பாஜக இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு வேளை பாஜக கேட்கும் இடங்களை அதிமுக ஒதுக்கவில்லை என்றால் கூட்டணியில் விரிசல் ஏற்படக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்