கொரோனா தடுப்பூசி செலுத்தினால் ரூ.60 ஆயிரம் பரிசு - மாநகராட்சி நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

covidvaccine ahmedabadmunicipalcorporation
By Petchi Avudaiappan Dec 01, 2021 05:12 PM GMT
Report

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபருக்கு ரூ.60 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அகமதாபாத் மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி ஒன்றே தற்காலிக தீர்வு என்பதால் அனைத்து நாடுகளுக்கு தங்களது மக்களுக்கு அதனை செலுத்த தீவிரம் காட்டி வருகின்றன. 

இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வலியுறுத்தி வருகின்றன. இதில் தமிழக அரசு சார்பில் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 

அதேபோல தடுப்பூசி செலுத்தி கொண்டால், பல்வேறு சிறப்பு பரிசுகளையும், ஊக்க பரிசுகளையும் வழங்குகிறோம் என்றும் அந்த மாநில, மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்தும் வருகின்றன. 

அந்த வகையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இதுவரை 78.7 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அவர்களில் 47.7 லட்சம் பேர் முதல் டோஸ்,  31 லட்சம் பேர் 2வது தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். இந்நிலையில், மேலும் இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக, தடுப்பூசி போட்டுக்கொள்வோரில் ஒருவருக்கு மட்டும் ரூ.60 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று  மாநகராட்சி அதிகாரிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதற்கு டிசம்பர் 1ம் தேதிக்கும் டிசம்பர் 7ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.