வழக்கை விசாரிக்காத விரக்தியில் நீதிபதி மீதே செருப்பை வீசிய டீக்கடை ஓனர் ..! என்ன நடந்தது..?
குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி மீது செருப்பை வீசியவருக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்து அகமதாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதியான கேஎஸ் ஜாவேரி ஒரு வழக்கை விசாரித்துவிட்டு வெளியே வந்தார்.
அப்போது யாரும் எதிர்பாராவிதமாக ஒருவர் அவர் மீது இரண்டு செருப்புகளை அடுத்தடுத்து வீசினார். நல்வாய்ப்பாக அந்தச் செருப்புகள் நீதிபதியின் மீது படவில்லை.

அங்கிருந்த காவலர்கள் செருப்பை எறிந்தவரைக் கையும் களவுமாகப் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதற்கு அவர் அதிர்ச்சியளிக்கும் விதமான காரணத்தைச் சொல்லியிருக்கிறார். அவர் ராஜ்கோட் மாவட்டம் பாயாவதர் பகுதியைச் சேர்ந்த டீக்கடைக்காரர் பவானிதாஸ் பாவாஜி என்றும், தனது வழக்கு நீண்ட நாட்களாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை எனவும், அதனால்தான் விரக்தியில் நீதிபதி மீது செருப்பை வீசியதாகவும் ஒப்புக்கொண்டார்.

இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து அகமதாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் இறுதி விசாரணை தற்போது முடிவடைந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குற்றவாளி என உறுதிசெய்யப்பட்ட டீக்கடை உரிமையாளர் பாவாஜிக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், பாவாஜியின் ஏழ்மை கருதி அவருக்கு அபராதம் விதிக்கபடவில்லை.
