பற்றி எரியும் வட மாநிலங்கள் .. கலவரமாகிறதா அக்னிபாத் திட்டம்? : பின்னணி என்ன ?
இந்தியாவில் தற்போது பேசு பொருளாகியுள்ளது மத்திய அரசு கொண்டுவந்த அக்னிபாத் திட்டம் , மத்திய அரசு அறிவித்தவுடன் நாடெங்கும் கலவரங்களும் போராட்டங்களும் நடத்தப்படுகிறது இதற்கு காரணம் என்ன ?தெரிந்து கொள்வோம் அக்னிபாத்தினை பற்றி
அக்னிபாத் என்பது என்ன
அக்னிபாத் என்பது இந்தியாவின் முப்படை ராணுவத்தை விரிவுபடுத்தும் திட்டமாகும் . இதன்படி இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் ராணுவ வீரர்கள் நான்கு வருட குறுகிய கால ஒப்பந்தத்தில் 4 ஆண்டுகள் பணியமர்த்தப்படுவார்கள்.
இதன்மூலம் இராணுவ வீரர்களின் வயதைக் குறைக்கவும், ஓய்வூதியச் செலவைக் குறைக்கவும் முடியுமென மத்தியஅரசு கூறுகிறது.
பொதுவாக இந்திய ராணுவத்திற்கு தேர்வு செய்யப்படும் வீரர்கள், பணிக்கு சேர்ந்து 60 வயது வரை பணியில் இருக்க அனுமதிக்கப்படுவார்கள்.
அதாவது அந்த வீரர் பணி ஒய்வு ஆகும் வரை பல்வேறு பிரிவுகளில் பணியில் இருப்பார்
ஆனால் அக்னிபாத் திட்டத்தில் ஒருவர் 4 ஆண்டுகள் ராணுவத்தில் குறுகிய கால வீரராக (முப்படையில் ஏதாவது ஒன்றில்) சேர முடியும்.
4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
பெண்கள், ஆண்கள் இரு பாலினரும் சேர முடியும் 17 முதல் - 21 வயது கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி. 10 அல்லது 12 - ம் வகுப்பு வரை குறைந்தபட்சம் படித்து இருக்க வேண்டும்
இந்த திட்டத்தின் மூலம் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
சிக்கலாகும் வழிமுறைகள்
வருடம் செல்ல செல்ல சம்பளம் உயர்த்தப்பட்டு . 4வது வருடம் அதாவது கடைசி வருடம் 40 ஆயிரம் ரூபாய் மாதம் சம்பளம் தரப்படும்.
இந்த 4 வருட ராணுவ பணி காலத்தில், ஏதாவது காயங்கள் ஏற்பட்டால் அதற்கு 44 லட்சம் ரூபாய் வரை, காயத்தை பொறுத்த நிவாரணமாக வழங்கப்படும்.
4 வருடம் முடித்து செல்லும் போது அவர்களுக்கு 11.7 லட்சம் ரூபாய் மொத்தமாக தரப்படும்.
இது நல்ல திட்டம் தானே என நாம் நினைக்கலாம் ஆனால் பிரச்சினை இருப்பது இங்குதான்
இளைஞர்களுக்கு பாதிப்பா அக்னிபாத்?
இதில் தகுதியானவர்கள் மட்டுமே 4 வருடத்திற்கு மேல் நிரந்தரமாக 15 வருடம் பணியாற்ற தேர்வு செய்யப்படுவர்.
மேலும் ராணுவத்தில் ஒப்பந்த வீரர்கள் வந்தால் ராணுவத்தின் திறன் பாதிக்கப்படும ராணுவத்தில் ஒழுக்கம் குறைய வாய்ப்பு உள்ளது
அதேபோல் 4 வருடத்திற்கு பின் வெளியே வரும் இந்த இளைஞர்களை வேலை இல்லாத காரணத்தால் தீவிரவாத இயக்கங்கள் அணுக வாய்ப்பு உள்ளது.
மேலும் 4 வருடம் கழித்து இந்த இளைஞர்கள் என்ன வேலை பார்ப்பார்கள்? மேலும் அந்த இளைஞர்களுக்கு இவர்களுக்கு ஒய்வூதியமும் இல்லை
இதில் வயது வரம்பு 21 வரை இருந்ததை எதிர்த்தும் இளைஞர்கள் நேற்று போராட்டம் செய்தனர்.
இதையடுத்து அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் 2022ம் ஆண்டு நியமனத்திற்கு மட்டுமே இந்த வயது வரம்பு பொருந்தும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வடஇந்தியாவில் தொடர்ந்து வரும் போராட்டங்களுக்கு இடையில் வயது வரம்பு உயர்த்தப்பட்டது.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைகிறது ஆனால் ஆக்னிபாத் திட்டம் இஸ்ரேல், அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள ராணுவத்தின் மாதிரி வடிவம் என்றும் சில அம்சங்கள் மாற்றியமைக்கப்பட்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது.
ஆனால் இந்த திட்டம் தற்போது கலவரங்களையே விளைவுகளாக கொடுத்துள்ளது.மேலும் அமெரிக்கா , இஸ்ரேல் சீனா , பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள பொருளாதார கட்டமைப்பு என்பது வேறு, இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பு என்பது முற்றிலும் மாறுபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு நாட்டிற்கு பாதுகாப்பிற்கு முக்கிய அரணாக இருப்பது ராணுவம் தான் , ஆனால் நாட்டின் சேவைக்காக பணியாற்றும் ராணுவ வீரர்களின் வருங்காலம் கவலையளிக்கும் நிலைக்கு செல்லாமல் இந்த திட்டம் செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு .
ஆகவே ராணுவத்திற்கு கை கொடுக்கும் அக்னிபாத் நடைமுறைகள் மாற்றியமைக்கப்படுமா ? அமைதியாகுமா கலவரங்கள்? அதற்கானா பதிலை வரும் காலங்கள் தான் கூற வேண்டும்.