நீங்கள் சொல்வதை செய்கிறேன் - மேடையில் ராமதாஸிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி
பாமக நிறுவனர் ராமதாஸிடம் அன்புமணி ராமதாஸ் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
பாமகவில் கடந்த சில மாதங்களாகவே அதன் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கி செயல்தலைவராக நியமித்தார்.
மன்னிப்பு கேட்ட அன்புமணி
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஒண்டிக்குப்பம் பகுதியில் நடைபெற்ற பாமக பொதுக் கூட்டத்தில், ராமதாஸிடம் அன்புமணி ராமதாஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்த கூட்டத்தில் பேசிய அவர், "பாமக தொடங்கி 36 ஆண்டுகள் ஆகிறது. இந்தக் கட்சியை ராமதாஸ் தொடங்கி நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். சமூகநீதிக்காக தொடங்கப்பட்ட கட்சி பாமக.
வருகின்ற 2026ல் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும். அடுத்தவர்களை ஆட்சிக்கு கொண்டுவர நாம் கட்சியை நடத்தவில்லை.
ஜூலை 24ம் தேதி ராமதாஸ் பிறந்தநாளில் தமிழக மக்களின் உரிமை மீட்பு நடைபயணம் தொடங்கவுள்ளேன். 100 நாட்கள் தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்திக்கவுள்ளேன்.
இன்று உலக தந்தையர் தினம். எனவே மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். ஐயா 100 வருடம் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். என் மீது ஏதேனும் கோபம் இருந்தால் ஐயா அவர்கள் மன்னிக்க வேண்டும்..தந்தையிடம் மன்னிப்பு கேட்பது ஒன்று பெரிதல்ல.
அவருக்கு சுகர், பிபி எல்லாம் உள்ளது. நீங்கள் நல்ல உடல் நலத்தோடு இருக்கவேண்டும். நான் என்ன செய்யவேண்டும் என சொல்லுங்கள். ஒரு மகனாக, கட்சியின் தலைவனாக அதை நிறைவேற்றுவேன்.
நீங்கள் வருத்தப்படாதீர்கள், கவலைப்படாதீர்கள், கோபப்படாதீர்கள். ஏனென்றால் இது நீங்கள் உருவாக்கிய கட்சி. உங்கள் கனவுகளை நனவாக்குவோம். நீங்கள் இன்று தேசிய தலைவர்" என பேசினார்.

லண்டனில் இருந்து சென்னை சென்ற விமானத்தில் கோளாறு : 360 பயணிகளுடன் நடுவானில் வானில் வட்டமடித்த விமானம் IBC Tamil
