இளம் நடிகை பிதிஷாவை தொடர்ந்து அவரது தோழியும் தூக்கிட்டு தற்கொலை - தொடரும் மர்ம மரணங்கள்..ரசிகர்கள் அதிர்ச்சி!
மேற்கு வங்காளம்,கொல்கத்தா நகரின் டம்டம் என்ற இடத்தில் நாகர்பஜார் பகுதியில் கடந்த 4 மாதங்களாக வாடகைக்கு வசித்து வந்தார் 21 வயதான பிதிஷா டி மஜும்தார் என்ற இளம் பெண்.
பிரபல மாடலான இவர் வங்காள மொழி படத்திலும் நடித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டில் வெளிவந்த பார்-தி கிளவுன் என்ற பெயரிடப்பட்ட குறும்படம் ஒன்றில் அனீர்பெட் சட்டோபாத்யாய் இயக்கத்தில் முதன்முறையாக பிதிஷா அறிமுக நடிகையானார்.
அந்த படத்தில் பிரபல நடிகர் தேப்ராஜ் முகர்ஜி நாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில், பிதிஷா தனது குடியிருப்பில் மர்மமான முறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பேரக்பூர் போலீசார் குடியிருப்பின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த பிதிஷாவின் உடலை கைப்பற்றி ஆர்.ஜி. கர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் நடிகை தங்கியிருந்த குடியிருப்பில் இருந்து தற்கொலை குறிப்பு ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அதில் தனக்கு இறப்புக்கு யாரையும் காரணமாக பிதிஷா குறிப்பிடவில்லை.
மேலும், பிதிஷாவுக்கு அனுபாப் பேரா என்ற காதலர் உள்ளதும் அவருடனான நட்புறவால் பிதிஷா மன அழுத்தத்தில் இருந்ததாகவும் பிதிஷாவின் தோழிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், பிதிஷாவின் தோழியான வங்காளத்தின் மாடலான மஞ்சுஷா நியோகி என்பவரும் தற்போது தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மஞ்சுஷா கொல்கத்தாவின் படுளி பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக் அனுப்பி வைத்தனர். இது குறித்து பேசிய மஞ்சுஷாவின் தாயார், பிதிஷாவுடன் ஒன்றாக வசிக்க வேண்டும் என மஞ்சுஷா தொடர்ச்சியாக கூறி வந்ததாக தெரிவித்தார்.
பிதிஷாவை பற்றியே மஞ்சுஷா எப்போதும் பேசி கொண்டே இருந்ததாகவும் பிதிஷாவை போன்று தமது வீட்டுக்கும் ஊடகக்காரர்கள் வருவார்கள் என மஞ்சுஷா தன்னிடம் கூறியபோது அவரை திட்டியதாகவும் ஆனால் தற்போது அவள் கூறியது போன்றே நடந்துள்ளதாக மஞ்சுஷாவின் தாயார் தெரிவித்தார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் 12 நாட்களுக்குள் அடுத்தடுத்து 3 பிரபலங்கள் உயிரிழந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.