2 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து நாடுகளுக்கும் விமானசேவை மீண்டும் தொடக்கம்
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக இந்த வைரஸிலிருந்து தப்பிக்க முடியாமல் ஒட்டு மொத்த உலகமும் தத்தளித்து வருகிறது.
தற்போது உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் மூலம் மூன்றாவது அலை உருவாகி பல உயிர்களை குடித்தது.
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து கொரோனாவின் வீரியம் படிப்படியாக குறைந்து வருவதால், இறப்பு எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வந்தது.
இதனையடுத்து, மத்திய அரசும், மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வுகளை அறிவித்துள்ளது.
இந்நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து அனைத்து நாடுகளுக்கும் விமான சேவை தொடங்கியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.