ஜி20 To ஜி21; ஆப்பிரிக்க ஒன்றியம் சேர்ந்ததன் மூலம் ஜி20 அமைப்பு மேலும் வலுப்பெறும் - இந்திய பிரதமர் மோடி!
ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி20 அமைப்பின் நிரந்தர உறுப்பு நாடாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார்.
ஜி20 உச்சி மாநாடு
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜி20 அமைப்பின் 18வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் கோலாகலமாக இன்று தொடங்கியது. இந்த மாநாட்டிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது.
மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட பல உலகத் தலைவர்களை இந்திய பிரதமர் மோடி வரவேற்றார். இந்த மாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி20 அமைப்பின் நிரந்தர உறுப்பு நாடாக முன்மொழிந்தார். உலகத் தலைவர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் பேசிய பிரதமர் மோடி, "உங்கள் அனைவரின் ஆதரவுடன், ஆப்பிரிக்க யூனியனை ஜி20 அமைப்பில் சேர அழைக்கிறேன்" என்று பேசினார்.
இதையடுத்து ஆப்பிரிக்க ஒன்றிய தலைவர் அசாலி அசோமணியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைத்து வந்து ஆப்பிரிக்க ஒன்றிய தலைவருக்காக போடப்பட்டிருந்தது தனி இருக்கையில் அமர வைத்தார்.
ஜி21 அமைப்பாக மாறுகிறது
பிரதமர் நரேந்திர மோடியின் முன்மொழிவை அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொண்டதை அடுத்து, ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பில் இன்று இணைந்துள்ளது. இதன் காரணமாக ஜி20 அமைப்பு இனி ஜி21 அமைப்பாக மாறுகிறது.
21-வது நாடாக ஆப்பிரிக்க ஒன்றியம் இணைந்துள்ள நிலையில், ஆப்பிரிக்க ஒன்றியம் சேர்ந்ததன் மூலம் ஜி20 அமைப்பு மேலும் வலுப்பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 குடும்பத்தை வலுப்படுத்துவதன் மூலம், சிறந்த கிரகத்திற்கு வழிவகுக்கும் அனைத்து வகையான வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளிக்கும் கூட்டாண்மைகளை உறுதிப்படுத்துவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
With the @_AfricanUnion strengthening the G20 family, we will cement partnerships that prioritise all-round development, leading to a better planet. https://t.co/8PQeUiN5Wm
— Narendra Modi (@narendramodi) September 9, 2023