மக்களவை தேர்தல்: பிரச்சாரம் செய்ய பயப்படும் அண்ணாமலை - என்ன காரணம்?
ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் செய்ய வரவே பயமாக உள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழக தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இந்த தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் பல்லடம் பகுதியில் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பயமாக உள்ளது
அப்போது அண்ணாமலை செல்லும் வழியில் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அண்ணாமலை "ஞாயிற்றுக்கிழமை என்றாலே இப்படித்தான் நடக்கிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் செய்ய வரவே பயமாக உள்ளது.
இதற்கெல்லாம் காரணம் டாஸ்மாக் கடைதான். எனவே டாஸ்மாக் கடைகளை மூடினால்தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். அதற்கு நீங்கள் பாஜகவை வெற்றி பெற செய்ய வேண்டும்" என்று பேசினார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.