கடும் பஞ்சத்தில் ஆப்கானிஸ்தான் - சிறுநீரகத்தை விற்று உணவு தேடும் மக்களால் அதிர்ச்சி

afghanistan Talibans ஆப்கானிஸ்தான் தாலிபான்கள்
By Petchi Avudaiappan Jan 25, 2022 03:49 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டில் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. 

கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து அந்நாட்டில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்து வருமானத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சொந்தமான சொத்துக்களைப் பயன்படுத்த அனுமதிக்காத நிலையில் அங்கு கடுமையான நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனிடையே உணவுப் பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அநாட்டில் சுமார் 2.2 கோடி மக்கள் தற்போது பசியில் வாடி வருவதாகப் பொருளாதார வல்லுனரான அப்துல் நசீர் ரிஷ்டியா தெரிவித்துள்ளார். வேலையிழப்பு, பஞ்சம் ஆகியவற்றால் அந்நாட்டில் உள்ள கிராமங்களில், மக்கள் சிறுநீரகத்தை விற்று உணவு தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக ஹெரட் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களில் 100க்கும் மேற்பட்டோர் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஒரு சிறுநீரகத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.70,000 வரை வழங்கப்படுவதாகவும், 5 வயது முதலான சிறுமிகளின் சிறுநீரகங்களும் விற்கப்படுவதாகவும் அதிர்ச்சியான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தங்கள் நாட்டுக்கு உதவுமாறு தாலிபான்கள் உலக நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.