ஆப்கான் மக்களுக்கு புதிய பாஸ்போர்ட், தேசிய அடையாள அட்டை: தாலிபான் அதிரடி அறிவிப்பு
இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. புதிதாக அரசாங்கத்தை அமைத்துள்ள தாலிபான், முக்கிய பதவிகளுக்கான பெயர்களையும் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட், தேசிய அடையாள அட்டைகள் ஆகியவற்றில் "ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அமீரகம்” என்ற பெயர் இருக்கும் என்று புதிய தாலிபான் அரசு அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் தகவல் மற்றும் கலாச்சார துணை அமைச்சரும், தாலிபானின் செய்தி தொடர்பாளருமான ஜபியுல்லா முஜாஹித், “ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட்களில் ’ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அமீரகம்’ என்ற பெயர் இருக்க வாய்ப்புள்ளது” என்று கூறியதாக, காமா பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், முந்தைய ஆப்கான் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் ஆகியவை இப்போதைக்கு செல்லுபடியாகும் என்று ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அமீரகம் கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தகவல் மற்றும் கலாச்சார துணை அமைச்சரும், தாலிபானின் செய்தித் தொடர்பாளருமான ஜபியுல்லா முஜாஹித், முந்தைய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணங்கள் நாட்டின் சட்ட ஆவணங்களாக இன்றும் செல்லுபடியாகும் என்று கூறியதாக காமா பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பாஸ்போர்ட் மற்றும் என்ஐடி துறைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன. தங்கள் பயோமெட்ரிக்ஸ் செயல்பாட்டை முடித்தவர்கள் மட்டுமே பாஸ்போர்ட் மற்றும் என்ஐடி-ஐப் பெற முடியும்.