மக்களே பத்திரமாக இருங்கள் - ஆப்கான் மக்களை எச்சரிக்கும் ஜோ பைடன்!
ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிரான நீண்ட கால போரில் தலீபான் பயங்கரவாதிகள் வசம் ஆட்சி அதிகாரம் முழுமையாக சென்றுள்ளது.
இதனை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் மீட்டு வருகின்றன.
சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களும் மீட்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்க விமானங்கள் மற்றும் விமானப்படைகள் மூலம் இதுவரை 1,12,000 பேர் வெளியேறினர். இன்னும் பலர் வெளியேற முயற்சிப்பதாக தெரிகிறது.
இந்த மீட்பு பணிகள் காபூல் விமான நிலையத்தில் இருந்து நடைபெறுகிறது. இதற்காக, காபூல் விமான நிலையம் ஆனது, அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
வருகிற 31ந்தேதிக்கு பின் காபூலில் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு படைகள் முழுவதும் திரும்பப்பெறப்படும் என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். இதனால், ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே குவிந்து வருகின்றனர்.
காபூல் விமான நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், காபூல் விமான நிலையத்திற்கு வெளியே கடந்த சில நாட்களுக்கு முன் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 190 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 13 பேர் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் ஆவர். இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: காபூலில் கள நிலவரம் தொடர்ந்து மிகவும் அபாயகரமான பகுதியாகவே உள்ளது. விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் அதிகளவில் உள்ளது.

அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக ராணுவ வீரர்கள் தம்மிடம் தெரிவித்து உள்ளனர் இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் காபூலில் இருக்கும் அமெரிக்க குடிமக்கள் விமான நிலையத்தில் இருந்து விலகி இருக்குமாறு ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து, விமான நிலையம் மற்றும் நுழைவு வாயில்களில் பயங்கரவாத தாக்குதல் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக, காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.