தலிபான் கொடுமை ஆரம்பம் - ஐபிஎல் தொடரில் ஆப்கான் வீரர்கள் பங்கேற்பார்களா?
ஆப்கானிஸ்தான் வீரர்களான ரஷித் கான், முகமது நபி ஆகியோர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்கள் என்றும்; ஆனால் இதுவரை அவர்களிடம் அதுகுறித்து எதுவும் பேசவில்லை என்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தெரிவித்துள்ளது.
Peace ????????????
— Rashid Khan (@rashidkhan_19) August 15, 2021
ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபன்கள் தாக்குதல் நடத்தி, ஆட்சியைப் பிடித்துவிட்டனர். தற்போது அதிபர் மாளிகை தாலிபன்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனிடையே, அதிபராக இருந்த அஷ்ரப் கானி பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள ஹமித் கர்சாய் சர்வேதச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்குப் புறப்படும் விமானங்கள் மக்கள் திரளால் ஸ்தம்பித்து உள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான ரஷித் கான், முகமது நபி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இரண்டாம் கட்ட ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்களா என்றும், அவர்களின் தற்போதைய நிலைமை என்ன என்றும் பல்வேறு கேள்விகள் எழுந்தன.
தற்போது ரஷித் கான் இங்கிலாந்தில் நடைபெறும் Hundred தொடரில் டிரன்ட் ராக்கெட்ஸ் அணிக்காகவும், முகமது நபி லண்டன் ஸ்பிரிட்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் ரஷித் கான், முகமது நபி ஆகியோர் பங்கேற்பார்களா அல்லது தங்களது குடும்பத்தினரைக் காண ஆப்கானிஸ்தான் செல்கிறார்களா என்பது தெரியவில்லை.
ரஷித் கான், முகமது நபி குறித்து, அவர்கள் விளையாடும் ஹைதராபாத் அணி நிர்வாகத்திடம் ஊடகங்கள் கேட்டபோது, "இதுவரை அவர்களிடம் இதுகுறித்து பேசவில்லை.
ஆனால், அவர்கள் வரவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் நிச்சயம் பங்கேற்பார்கள்" என அந்த அணியின் தலைமை செயல் அலுவலரான சண்முகம் தெரிவித்தார்.
இதனால் மனமுடைந்த வீரர் ரஷித் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பீஸ் (அமைதி) என்று பதிவிட்டிருக்கிறார்.