2000 பேரை காவு வாங்கிய நிலநடுக்கம் - ஆப்கான். வீரர் 'ரஷீத் கான்' செய்த நெகிழ்ச்சி செயல்!
நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது உலகக்கோப்பை சம்பளத்தை நன்கொடையாக அறிவித்துள்ளார் ரஷீத் கான்.
நிலநடுக்கம்
தாலிபான்கள் ஆட்சி நடந்து வரும் ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மி தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோல் 6.3 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
மேலும், அந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 5.5 ரிக்டர் அளவு கொண்ட பின்னதிர்வு ஏற்பட்டதாகவும் அந்த மையம் கூறியுள்ளது. தொடர்ச்சியாக 8 முறை ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வுகளால் பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்துள்ளன. பலர் அலறியடித்தபடி வெளியேறி, தெருவில் தஞ்சமடைந்தனர்.
பரா மற்றும் பத்கிஸ் பகுதிகளில் சில வீடுகள் முற்றிலும் அழிந்து விட்டன. நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்று 2வது நாளாக நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தில் சிக்கி 320 பேர் உயிரிழந்ததாக ஐ.நா முதலில் தெரிவித்திருந்தது.
ரஷீத் கான்
தற்போது பலி எண்ணிக்கை 2000 பேரை தாண்டியுள்ளதாகவும், சுமார் 6 கிராமங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளன. மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் ரஷீத் கான், உலகக் கோப்பையில் தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நன்கொடையாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.